சென்னை : சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் மீது சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் அடிக்கடி வட இந்திய மாநிலங்களுக்கும் நேபாள நாட்டுக்கும் ஆன்மிக சுற்றுலா சென்று வருவது வழக்கமாகும்.ஆகையால் தேடப்படும் சாமியார் சதுர்வேதி நேபாளம் தப்பியிருக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வாரணாசி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சாமியார் சதுர்வேதி மீது சென்னை மகளிர் கோர்ட்டில் 14 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது.
வழக்கு விவரம்
தன்னை தானே சாமியார் என்று பிரகடனபடுத்தி கொண்டவர் சதுர்வேதி, அவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் சதுர்வேதிக்கு உண்டு. சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வந்தார். ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷின் மனைவி மகளை கடத்தியதாக சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டது.அந்தக் கால கட்டத்தில் சாமியார் இருவரையும் பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுரேஷிடம் ரூ. 15 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது. அதுமட்டுமின்றி டி.டி.கே சாலையில் உள்ள சுரேஷ் வீட்டின் கீழ் தளத்தையும் ஆக்கிரமித்ததாக சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க தொடங்கினர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த விசாரணையில் சாமியார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் வருடம் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார் தலைமறைவாகி விட்டார் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் நேரத்தில் சாமியார் மாயமானதால் நாடு முழுவதும் உசார் நிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சதுர்வேதியின் புகைப்படங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி